முதலில் சுத்தமாகத் தெரியாது.. ஏதோ சிறுமி எதற்கோ நிறுத்துகிறாள் என்று நினைத்துதான் குதிரையை விட்டு இறங்கினோம்.. அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. நாங்கள் உருகிப் போய்விட்டோம்.. எதற்கும் கலங்காத நரசிங்க மகாராஜா அந்த நடுச் சாலையில் மண்டியிட்டு அந்த சின்னப்பெண்ணின் கையைப் பிடித்து ’ஏனம்மா அழுகிறாய்’ என்று கேட்டார்.. அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் எங்களை இதோ நாம் இங்கே நிற்கிறோமே அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு இந்தக் கோயில் உள்ளே வருமாறு வேண்டினாள். என்னையும் கையைப் பிடித்து அழைத்துப் போனாள்..”
கண்களில் ஏதேனும் கண்ணீர் வந்ததோ என்னவோ, திம்மராசு சடாரென தன் கண்களை மேல்துணியால் ஒற்றிக் கொண்டார்.
“எனக்கு வயது அப்போது நாற்பது இருக்கும் கிருஷ்ணா.. என் மூத்த பெண் நன்றாக வளர்ந்து சட்டென ஒரு நோய் வந்து இறந்து போன நேரம் அது.. அந்தப் பெண்ணைப் போலவே இவளும் இருந்தாள்.. எனக்குள் என்னை அறியாமலே ஒரு தந்தைப் பாசம். அந்தப் பெண் என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப் போகும்போதே அந்தப் பாசத்தின் வலி என் நெஞ்சைப் பிசைந்து கொண்டே இருந்ததை எப்படிச் சொல்வேன்..” திம்மராசு பெருமூச்சு விட்டு மறுபடியும் பேசினார்
”கிருஷ்ணா! அவள் ஒரு வார்த்தை எங்களிடம் பேசவில்லை. அவளே அங்கே உள்ள சிலந்தி வலைகளைக் கலைத்தாள், உடைந்த கற்களையும் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினாள். சிறிது நேரம் அப்படிச் செய்தவள் மறுபடியும் என் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வந்தாள். பாசி படிந்த நீர்க்குளம் அருகே நின்றாள்.. அருகே கிடந்த காய்ந்த சருகுகளையெல்லாம் ஒதுக்கிக் கொண்டே சென்றவள் கோயில் உள்ளே பெருமாள் கர்ப்பக்கிருகத்தருகே வந்து நின்றாள்.. அவள் மறுபடி எங்களை ஒன்றும் கேட்கவில்லை.. என்னைப் பிடித்துக் கொண்டு வந்த கையை அவளே விடுப்பித்துக் கொண்டாள்.. பெருமாளைக் காணச் செல்கிறாளோ என்று நினைத்தோம்தான். உள்ளே அந்த இருளான கருவறையில் சென்றவள்.. மறுபடி வரவில்லை.. குரல் கொடுத்துப் பார்த்தோம்.. கருவறை உள்ளேயே சென்றோம்.. திக்பிரமையோடு அதுவரை கூடவே வந்த நரசிங்க மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எங்களை அழைத்து வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை.. சாட்சாத் ஆண்டாளே.. அவள்