You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / நாயகன் - விஷ்வக்ஸேனன்

நாயகன் - விஷ்வக்ஸேனன்


By humble - Posted on 24 February 2010

நாயகன்

விஷ்வக்ஸேனன்

தாத்தா வேதப்ப ஐயர் கண்டிப்பாய் ஒரு கோயிலாவது கட்டியிருக்க வேண்டும். அவர் மனைவி மங்களம் குறைந்தது லட்சம் பேருக்காவது அன்னதானம் செய்திருக்க வேண்டும். அவர்களின் மகன் ராமசாமி ஐயர் இன்னும் ஒரு படி மேலே. கிராமத்துக் கணக்கு வேலை பார்த்தாலும் கலைமகள் சரஸ்வதி தேவியை உபாசித்து, நேரில் பார்த்¢து அந்த வரத்தை வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஐந்து ஆறு வயதிலேயே அஷ்டபதியையும், கிருஷ்ணலீலா தரங்கிணியையும் மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடிய, கிருஷ்ணமூர்த்தியென்று இப்படியொரு காவிய நாயகன் மகனாகப் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒன்பது கோள்களும் ஒன்று சேர்ந்து தங்கள் பங்குக்கு கிருஷ்ணமூர்த்தியை ஆசீர்வதித்திருக்க வேண்டும். அவர் பிறந்த தேதி அப்படி..விகாரி வருஷம், ஆவணி மாதம், சனிக்கிழமை, சுவாதி நட்சத்திரம். தேதி 9.9.1899.

இவர்களைவிட ஒருபடி அதிகம் புண்ணியம் செய்தவர் ஒருவர் இருந்தார். அ, ஆ என்று அட்சராப்பியாசம் செய்து கல்வியைத் தொடங்கி வைத்த சுவாமிநாத ஐயர். அவர் தொடங்கி வைத்த எழுத்தறிவு பின்னாளில் எத்தனையோ தமிழ் மக்களின் மனங்களை கொள்ளை கொள்ளப் போகிறது என்பதை அவர் அறிந்திருப்பாரா......

எட்டு வயதில் பிரும்மோபதேசம். யஜூர் வேதத்தின் ருத்ரம் மனப்பாடமானது. அதைக் கேட்டு மகிழ்ந்த்தே போதும் என்று எட்டு வயது முடியும் முன்னர் தந்தை ராமசாமி ஐயர் மறைந்தார். பக்கத்து வீட்டு அய்யாசாமி ஐயரும் அபயாம்பாளும் இவரையும் இவர் அண்ணனையும் ராமலட்சுமணாகளாக வரித்து தங்கள் பிள்ளைகளாக ஆக்கிக்கொண்டார்கள். சோழ ராஜவம்சத்துக் கதையை எழுதப் போகிறார் என்று உணர்ந்துதானோ என்னவோ, அய்யாசாமி ஐயர் இவரை ராஜப்பா என்று அழைத்தார். உருவம் காரணமாக அகஸ்தியர் என்று இன்னொரு பெயரும் இட்டார்.

ஆற்றங்கரை ஆலமரத்தடி இவரது சிம்மாசனம், ஆங்கில தமிழ் நாவல்களைக் கரைத்துக் குடித்த்து
அங்கேதான். கையில் வேர்க்கடலை, அது தீர்ந்து போனால், தலைமுடியைச் சுழற்றிக் கொண்டேயிருக்கும் கை. அல்லது கீழுதட்டை நிமிண்டிக் கொண்டிருக்கும். சுவாரஸ்யமான கட்டங்கள் படிக்கும்போது பலே, பலே.....போடு சக்கை என்பார். இன்னும் சுவாரஸ்யம் கூடிவிட்டால் வருவது நாசமாப் போச்சு..... அவரது மேனரிசங்களும் சுவாரஸ்யத்தைக் காட்டும் வார்த்தைகளும் வயதான பின்னரும் தொடர்ந்தன. கிருஷ்ணமூர்த்தியின் இளமைக்கால அனுபவங்கள், கிராமத்துச் சூழ்நிஅலை, ரசித்த இயற்கை, அத்தனையும் அவரது நாவல்களில் இடம் பெற்றன. அய்யாசாமி ஐயரின் விஷம் தீர்க்கும் வித்தையும்கூட இவரது கதை விட்டுவைக்க வில்லை.

கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் கல்வி தொடர்ந்த்து. திருச்சி பிரதான தெப்பக்குளத் தெருவிலிருக்கும் ஈ.ஆர். உயர்நிலப் பள்ளியில் 16.10.1917 ல் மூன்றாவது பாரம் (8ஆம் வகுப்பு) இவர் சேர்ந்ததற்கான பதிவுகள் இன்னும் இருக்கின்றன. பின்னர் 1918ல் நேஷனல் பள்ளியில் கல்வி தொடர்ந்த்து. இவரது வகுப்புத் தோழர் திரு. பி.எஸ். பாலகிருஷ்ணன், பின்னாளில் ஐ.ஏ.எஸ். முடிந்து ரயில்வே துறையில் தலைமைத் தணிக்கை அதிகாரியானார். இவர் 1921ல் ஆறாவது பாரம் படிக்கும் போது புத்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு சுதந்திரப் போராட்ட்த்தில் குதித்துவிட்டார்.

இவர் படிப்பை தூக்கி எறிந்த்தற்கு காரணமான டாக்டர் டி.எஸ். சௌந்திர ராஜன் தான் இவரைக் கழுத்தைப் பிடுத்து தள்ளாத குறையாக எழுத்துலகிற்கு அனுப்பி வைத்தவர். எழுத்துலகிற்கு வந்து, சுதந்திரப் போராட்டத்தை வளர்த்து, பின்னர் தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் வளர்த்தது மட்டுமின்றி, அன்புக்குரிய நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் கூறூவதுபோல் சரித்திர நாவல்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அமரர் கல்கிதான். இவரது நாவல்களைப் போலவே இவரது சரித்திரமும் சுவையானது, சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்தது, எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் புதுப்புது கோணங்களை, அர்த்தங்களை, மனித வாழ்வின் பாடங்களைப் புகட்டுவது.

Visitor Map

Locations of visitors to this pagecounter for wordpress

Navigation