You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / முன்னுரை
முன்னுரை
ஒரு வரலாற்றுப் பேரவையின் வரலாறு
வாசகர்களுக்குப் பொன்னியின் செல்வன் குழுவினரின் அன்பான வணக்கங்கள்.
இணைய மடற்குழுமம் என்பதே ஒரு சுவாரஸ்யமான தத்துவம். அதனை நன்கு புரிந்துகொண்டால்தான் எவ்வாறு முன்பின் தெரியாத இரண்டாயிரத்து சொச்சம் பேர் அமரர் கல்கியவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு இணைய உலகில் கூடியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதனால் முதலில் இணையக் குழுமம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
சராசரி வாழ்வின் நெருக்கடிகளையும் இன்ப துன்பங்களை மீறி நம்மில் ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு வித்தியாசமான துறையில், கலையில் ஆர்வமிருப்பதுண்டு. அந்த ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் குடும்பத்தாரையும் அக்கம்பக்கத்துவீட்டாரையும் நண்பர்களையும் தேடி ஓடுவோம். நாம் மின்னஞ்சல் மூலம் இணைந்து நண்பர்களாவோம்.." என்று கைகோர்க்கும் வித்தியாசமான சாகசம் அது.
இருவர் மட்டுமென்றால் மின்னஞ்சல் போதும். ஆர்வம் கொண்டவர்கள் இருநூறு பேர் என்றால்? இரண்டாயிரம் பேர் என்றால்? இங்குதான் இணையக் குழுமம் என்பது உருவாகின்றனது. நாம் பகிர்ந்துகொள்ள விழைவதை நொடியில் அது நூற்றுக்கணக்கானவர்களுக்குச் சேர்ப்பித்துவிடும். உங்கள் வினைக்கான எதிர்வினை - ஏற்றலோ மறுத்தலோ - நிமிட நேரத்தில் கிடைத்துவிடும் புதிய உலகம் அது.
தமிழ் உலகில் படைக்கப்பட்ட வரலாற்றுப் புதினங்களுள் தனியிடம் பெற்றுத் திகழும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் எனும் புதினத்தின்பால் ஆர்வம் கொண்டவர்களுக்காக இணைய உலகில் படைக்கப்பட்ட தனியிடம்தான் பொன்னியின் செல்வன் குழுமம் (http://groups.yahoo.com/group/ponniyinselvan). பொன்னியின் செல்வன் வெளியாகி ஐம்பது வருடங்கள் கழித்து - பலப்பல தலைமுறைகளையும் தலைமுறை கொடுக்கும் இடைவெளிகளையும் தாண்டி - "தமிழுக்கும் இலக்கியங்களுக்கும் சம்மந்தமில்லாதவர்கள்" என்று வழக்கமாக வர்ணிக்கப்படும் உலகளாவிய தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது இந்த உலகம் என்பதுதான் இதன் முதல் சிறப்பு. முழுச்சிறப்பு.
விழுதுகள் விழ நிற்கும் இந்த ஆலமரத்திற்கான முதல் விதை வெ. பாலாஜி, அவரது சகோதரி இலாவண்யா மற்றும் ம. இராமசந்திரன் ஆகிய மூன்று நண்பர்களால் 2002ல் ஊன்றப்பட்டது. குழு துவக்கப்பட்ட முதல் வருடத்தில் மடற்குழுவின் எண்ணிக்கையும் தான். எந்தவிதமான விளம்பரமும் இன்றியே இந்த ஏழாண்டுகளில் ஏறத்தாழ இரண்டாயிரம் உறுப்பினர்கள் சேர்ந்து, அமரர் கல்கியின் எழுத்துக்களுக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இடமுண்டு என்பது நிரூபணமாயிற்று.
குழு துவங்கப்பட்ட காலத்தில் இரண்டே இரண்டு பிரச்சனைகள்தான் குழுவினருக்கு முக்கியமானதாக தெரிந்தன. ஒன்று நந்தினியின் பிறப்பு இரகசியம். இரண்டு ஆதித்த கரிகாலரின் கொலை மர்மம். இரண்டு பிரச்னைகளுமே இரவு பகலாக அலசி ஆராயப்பட்டன. கல்கியவர்களே சிந்தித்திராத போக்கிலெல்லாம் நாங்கள் சிந்தித்தோம். வாதித்தோம். வாதத்திற்கு வலுக்கூட்ட மீண்டும் மீண்டும் அந்த இலக்கியத்தை வாசித்தோம். வாசித்து வாசித்து அதனை அணு அணுவாய் நேசித்தோம்.
ஆர்வம் ஆசையாயிற்று. ஆசை ஆழமான நேயமாக உருவெடுத்தது. Desire became a passion. இந்தக் கட்டத்தில்தான் பொன்னியின் செல்வன் கதை நிகழும் சோழநாட்டுக் களங்களையெல்லாம் நேரில் பார்வையிட்டுவிட்டு வந்தால் என்ன? என்கிற யோசனை தோன்றவே, தீட்டப்பட்டது ஒரு பயணத ¢திட்டம். அந்தத் திட்டத்தை வகுத்துக்கொடுப்பதற்காக எழுத்துச் சித்தர் பாலகுமாரனை அணுகினோம். அந்த அன்பான மனிதர் SPSஐ அறிமுகப்படுத்தினார்.
"குழுவை உருவாக்கிய நண்பர்களின் குடும்ப நண்பன் நான். அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன். அதுதான் உங்களெல்லோரையும் இத்தனை தூரம் இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது!" என்றார். "என்ன கேள்வி அது?" என்று வினவினோம். "பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மர் மட்டுமல்ல - இரவிதாஸனும் சோமனும் பரமேஸ்வரனும் கூட கற்பனைப் பாத்திரங்களல்ல. நிஜமான சரித்திர மனிதர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்றார். தூக்கிவாரிப்போட்டது எங்களுக்கு! உடனே உற்சாகத்துடன் "நந்தனி எப்படி?" என்று வினவினோம். "ம்ஹ¨ம். துரதிருஷ்டவசமாக நந்தினி நிஜப்பாத்திரமல்ல. கல்கியின் கற்பனையில் உதித்த கதாபாத்திரம்!" என்றார். எழும்பிய உற்சாகக் குமிழி ஒரே கணத்தில் உடைந்து போனது.
எங்களின் பொன்னியின் செல்வன் ஆர்வத்தை முற்றி முதிர வைத்து அதனை வரலாற்று ஆர்வமாக வளர்த்து விட்டதில் SPS @ சிவபாதசேகரனுக்குப் பெரும் பங்குண்டு. "நீங்கள் கல்கியை நேசிப்பதற்குக் காரணம் அவர் காட்டும் பழமை. அப்பழமை கொடுக்கும் தமிழ் வரலாற்றுப் பெருமை!" என்று மெல்லச் சொல்லி எங்களை மயங்க வைத்தார் அவர். ஜனவரி 2004லேயே, SPS பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையை ஆரம்பிக்கும் விதமாக மடல் எழுதினார். அதில் வரலாற்று ஆய்வு மையம், பேரவைக்கென ஒரு சின்னம், ஒரு அமைப்பு குழு போன்ற பல கனவு எண்ணங்கள் விவாதிக்கப் பட்டன. அன்றைய குழு உறுப்பினர்களால் ஆர்வமுடன் வரவேற்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இக்கனவுகள் உருவம் பெறுகின்றன.
SPS அறிமுகப்படுத்திய அத்தனை ஆய்வாளர்களிடமும் அயராமல் தயங்காமல் கேள்விக் கணைகளைத் தொடுத்தோம். அந்தக் கேள்விக் கணைகளை எல்லாம் ஒரே ஒரு மனிதரின் முன்பு மட்டும் பூக்கணைகளாக விழுந்தன. அந்தக் கண்ணான மனிதர்தான் எங்களில் பலரையும் அடுத்த கட்டத்திற்கு ஆயத்தப்படுத்தியவர். தொழிலால் அவர் கண் மருத்துவர். அந்தக் கலைக்கடலின் பெயர் முனைவர் இரா.கலைக்கோவன். பல்லவர் வரலாறு படித்த மேதை டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களின் புதல்வர். அவர் எங்களை அன்போடு அரவணைத்தார். ஆற்றுப்படுத்தினார். "வரலாறு வேண்டுமா? வாருங்கள் திருக்கோயில்களுக்கு!" என்று எங்களைப் பெயர் தெரியாத இடங்களுக்கெல்லாம் இட்டுச் சென்றார். வரலாற்றை நேரடியாக முகப்பூச்சின்றித் தொட்டுக் காட்டும் கல்வெட்டுக்களையும் சிற்பங்களையும் கட்டுமானத்தையும் காட்டிக் காட்டி எங்களுக்குக் கள்வெறியூட்டினார். நண்பர்களே! அவருடைய வழிகாட்டுதலில் 15. 08. 2004ல் துவங்கப்பட்டு, இணையத் திங்களிதழான http://www.varalaaru.com, இந்த நான்காண்டு காலத்தில் தென்னக வரலாறு சார்ந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட படைப்புக்களை இணையத்தில் இலவசமாய் வெளியிட்டுள்ளது.
varalaaru.com வெளியான சில திங்களிலேயே தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் ‘ நவீனக் கணிப்பொறி கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு எப்படிச் சிதைந்துவிட்ட சோழ ஓவியங்களைச் சீராக்குவதென’ விளக்கும் நிகழ்ச்சியை நிகழ்த்தும்படி எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. என்ன தலைப்புத் தெரியுமா? தமிழகத்தின் பழைய பத்தாம் நூற்றாண்டின் வரலாற்றுப் பொக்கிஷங்களுக்கு எப்படி இருபதாம் நூற்றாண்டின் இன்றைய தொழில் நுட்பத்தைக் கொண்டு புத்துயிர் அளிப்பது என்பதைப் பற்றிய வித்தியாசமான விவாதம் அது. பெரிய கோயில் வளாகத்தில் நிகழ்ந்த அந்தப் பொழிவே பின்னர் தொல்லியல்¢ துறையுடன் நாங்கள் தொடர்பு கொள்வதற்குக் காரணமானது. அது மட்டுமல்ல. இருளில் முங்கிக்கிடந்த சோழர் காலக் கலைப் பெட்டகங்களை அனைவரும் காணும்படி வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஸ்ரீராமன் எனும் அன்பு நண்பரையும் எங்களின் நட்பு வட்டத்திற்குள் அது கொண்டுவந்து சேர்த்தது. அந்த நண்பர்தான் எளிதில் காணமுடியாத சிவபெருமானின் சிங்காரக் கரணங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர். அதே நண்பர்தான் இன்று சோழர் கால இராஜ முத்திரை நம் அனைவரின் கைகளில் கிடைப்பதற்கும் காரணமானவர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வரலாற்றோடு தொடர்புடைய அனைவருடனும் நாங்கள் தொடர்பு கொண்டோம். அதில் குறிப்பிடத்தக்க இமயங்கள் மூன்று. அவற்றுள் முதல்வர் தமிழ்நாட்டு வரலாற்றாய்வாளர்களுள் மிக முன்னவர். மூத்தவர். பெரியகோயிலின் மூலம் இராஜராஜர் காட்டும் கையிலாயத் தத்துவத்தைத் தொட்டுக் காட்டிய மேதை டாக்டர் இரா. நாகசாமி அவர்கள். இரண்டாமவர் தன்னுடைய தலைமையின் மூலம் தென்னகத் தொல்லியல் அளவீட்டுத் துறைக்கே பெருமை சேர்த்த பெரியவர். இன்று ரீச்¢ பஃவுண்டேஷன் (www.conserveheritage.org) எனும் தனது தொண்டு நிறுவனம் மூலம் பழந்திருக்கோயில்களை - அவற்றின் வரலாறு கெடாமல் - புதுப்பிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொணடிருக்கும், டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி அவர்கள். மூன்றாமவர் வரலாற்று மந்திரங்களை எளிமையாக எடுத்துச்சொல்லி அந்தப் பொக்கிஷத்தை அனைவருக்கும் சென்று சேர்த்த தொல்லியல் அறிஞர். டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியம்.
இந்த இமயங்களோடு சேர்ந்த பல தொல்லியல் சிகரங்களோடும் தொட்டுப் பழகும் பாக்கியமும் எங்களுக்குக் கிடைத்தது. அகத்தியர் மடற்குழுவின் நடத்துனரும் பிரபல மலேசியத் தமிழறிஞருமான கடாரம் கொண்ட டாக்டர் எஸ். ஜெயபாரதி, காடுகளிலும் மேடுகளிலும் அலைந்து திரிந்து கல்வெட்டுச் செய்திகளை அமுதமாய்ச் சுரக்கும் தொல்லியல் அளவீட்டுத் துறையின் டாக்டர் எஸ். இராஜவேலு. ஐ.ஐடி (I.I.T)யில் பேராசிரியராய்ப் பலப்பல வருடங்கள் பணியாற்றிவிட்டுத் தமிழகத்தின் வரலாற்று எச்சங்கள் தேடி பொதுமக்களிடையே அவற்றை வெளிக்கொண்டுவரும் பேராசிரியர் சு. சுவாமிநாதன், தமிழகத் தொல்லியல் துறையில் பல வருடங்கள் பணியாற்றிவிட்டு இன்று தென்னகத்தின் சமுதாய வரலாற்றைப் பற்றிய தகவல்களைத் தேடும் திரு. எஸ். இராமசந்திரன் என்று இந்தப் பட்டியலின் நீளம் நீளும்.
வரலாற்றுப் பேரவையின் அடுத்த கட்ட வரலாற்றில் சென்னையின் வாரன் சாலை பிரதான இடம் பிடித்தது. தமிழகக் காங்கிரஸ் கட்சியில் தனியிடம் பெற்றுத் திகழும் குடும்பம் வசிக்கும் சாலை அது. அந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரு நல்முத்து எங்கள் குழுமத்தில் பிரகாசித்தது. அதுவே (அனுஷா) வெங்கடேஷ் என்றொரு அருமையான இளைஞரைக் குழுவிற்கு அறிமுகம் செய்தது. இந்த இளைஞர்தான் பின்னாளில் கல்கியின் பொன்னியின் செல்வன் கனவைத் தன்னுடைய கனவாய்க்.. காவியமாய்... காவிரி மைந்தனாய்த் தொடரத் துணிந்தார்.
தோழர்களே, இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுக்களிலேயே ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழகத்தில்தான் கிடைக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? தௌ¤வான வரலாற்றை முறையாக எழுதுவதற்கு அடிப்படைகளாய் அமையும் கல்வெட்டுக்களைப் படிக்கும் ஆற்றலைக் குழு உறுப்பினர்கள் அனைவருமே பெறவேண்டுமென்று நினைத்தோம். 2006ல் உதித்த அந்தக் கனவு 2008ல்தான் ரீச் பஃவுண்டேஷனின் கல்வித்துறையாம் A.A.S.A.I (Academy of Archeaology and Sciences of Ancient India) மூலம் சாத்தியப்பட்டது. அதே போல மைசூரில் முடங்கிக் கிடக்கும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பிக்கப்படாத கல்வெட்டுக்களை ஆய்வுலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்று பெரு ஆய்வாளர்களும் பேரவையின் உறுப்பினர்களும் கண்ட கனவு இன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிஜமாகியிருக்கிறது.
குழுவில் இன்றுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கூடியுள்ளார்கள். இதில் உலகளாவிய வகையில் அனைத்து திசையிலும் உள்ள நாடுகளில் இருந்தும் அன்பர்கள் இணைந்துள்ளனர்.
சுருங்கச் சொன்னால்¢ வரலாறு காட்டும் உண்மை வெளிச்சத்தில் தமிழர் மீதும் பண்டைய தமிழ்ச் சமுதாயத்தின் மீதும் நிஜ நேசம் கொண்ட ஆர்வலர்களின் உலகத் தமிழ் மையமாகப் பொன்னியின் செல்வன் குழு இன்று பெருமையுடன் பூரித்து நிற்கிறது. ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் மட்டுமின்றி ஆடிப் பெருநாளுக்கும் ஐப்பசி சதயத்திற்கும் கூட நாங்கள் வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்கிறோம். ஆடிப்பெருநாள்தான் காவிரித்தாய் எங்கள் அருள்மொழியை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார். ஐப்பசி சதயம் எங்கள் ராஜராஜனின் திருநட்சத்திரம். வரலாறு நம்மோடு நடந்தால் வருடம் முழுவதும் திருவிழாதானே? ஒவ்வொரு தினத்திலும் கொண்டாடுவதற்கென்று வரலாறு ஏதாவது வைத்திருக்கிறதல்லவா?
இந்தப் பூரிப்பு மடற்குழுவிற்குள் மின்மடல்களுக்குள் முடங்கிவிடக்கூடாது. வரலாறு விரித்துரைக்கும் இந்த விவாதங்கள் உலகத் தமிழர் அனைவரையும் ஒருசேர அடைய வேண்டுமென்று நினைத்தார் ஒரு குழு நண்பர். அவர் கணிணித் தொழில் நுட்ப உலகில் ஒரு கற்பகத் தரு. பெயரோ திரு (திருமலை). அவர் உருவாக்கிய வலைத்தளம்தான் யாஹ¨ குழுமத்தை மீறித் தனியொரு அடையாளத்தை எங்களுக்கு அளித்தது. அந்த வலைத்தளம் இருக்கும் இடம் http://www.ponniyinselvan.in. அதேபோல் இராஜராஜரின் காவியத்தை உலகிற்கு எடுத்தியம்ப பழையாறை வைத்தியர் (ஸ்ரீதர்¢ ௲ லண்டன்) எடுத்த முயற்சியே www.thebigtemple.com.
இவ்விரண்டு இணையத் தளங்களைத் தவிரக் குழுவினர் அன்றாடம் சொல் நீர் விட்டு வளர்க்கும் இணைய வலைப்பூக்கள் பலப்பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
• விஜய் அவர்களின் சிற்பக் கவிதை (http://www.poetryinstone.in)
• ரீச் சந்திரசேகரனின் பழங்கோயில் புதுப்பிப்பும் (http://templesrevival.blogspot.com)
• வைரத்தின் கற்க நிற்க (http://karkanirka.wordpress.com)
குழுவில் இணைந்திருக்கும் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதின எழுத்தாளர்கள் பலர். அவர்களில் முதன்மையானவர் ஆந்திர தேசத்தில் அமர்ந்துகொண்டு தமிழ் வரலாற்றுக் கனவு வளர்ப்பவர். வம்சதாரா வகுத்த வி. திவாகர் (http://vamsadhara.blogspot.com). இன்னொருவர் அருள்மொழியைக் காவிரி மைந்தனாக்கிய அனுஷா வெங்கடேஷ் (http://kavirimainthan. wordpress.com). மற்றொருவர் கல்கியின் சிவகாமி சபதத்தை ஆங்கில உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய பவித்ரா ஸ்ரீநிவாசன். இன்னொருவர் கல்கியின் பூமியான கல்கி பத்திரிகையிலேயே வரலாற்றுப் புதினமெழுதும் பெருமை பெற்ற விஷ்வக்ஸேனன். இன்னொருவர் சமகால வரலாற்று நாயகர்களையும் நிகழ்வுகளையும் நூல்களாக வடிக்கும் பா. முருகானந்தம். இப்படி எங்களின் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள். இத்தனை நட்சத்திரங்களுக்கு மத்தியில் இன்னொரு ஒரு எழுத்தாளரும் உள்ளார். பூவோடு சேர்ந்து மணம் பெறும் நாரைப் போல அவரும் தட்டுத்தடுமாறி மூன்று வரலாற்றுப் புதினங்கள் எழுதி முடித்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல - அடியேன்தான்.
விழா மலர்க் குழுவின் சார்பாக,
கோகுல் சேஷாத்ரி



