You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / குழலிப் பாதை - ஓகை நடராஜன்
குழலிப் பாதை - ஓகை நடராஜன்
குழலிப் பாதை
ஓகை நடராஜன்.
இருபது இருபது என்ற தலைப்பில் மரபுக் கவிதை எழுத முற்பட்டபோது அத்தலைப்பை இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில் நிகழும் ஒரு நிகழ்வாக சித்தரித்துப் பிறந்த ஒரு மரபுக் கவிதை இது. தமிழகத்தின் கோடியக்கரையிலிருந்து இலங்கையின் வடமுனையான காங்கேசன் துறை என்னுமிடத்துக்கு கடலில் ஒரு தொடர்வண்டிப் பாதைக்கான பாலம் பற்றிய கவிதை. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் இணையில்லா கதாபாத்திரமான பூங்குழலி அடிக்கடி படகில் கடந்த இந்தப் பாதைக்கு குழலிப்பாதை என்றே பெயரிட்டுக்கிறேன்.
இருபதுஇருபது என்றவோர் அருங்கருத்தில் கவிசெயவே
பெருமுயற்சி செய்தநான் பெற்றதெல்லாம் சுழியேதான்.
நனவுலகில் முடியாத நடப்பையெலாம் வெகுசுளுவாய்
கனவுலகில் முடித்துவிட்டுக் களித்திருப்பது என்வழியே!
கைவந்த இவ்வழியை கைகொள்ள இப்போதும்
மெய்சாய்த்துக் கண்ணயர்ந்து பொய்நனவில் ஆழ்ந்துவிட்டேன்.
கடற்கரை நிலையமொன்றில் கவின்மிகக் காத்திருந்த
தொடர்வண்டி உள்ளிருந்தேன் தொடங்குநிலை பயணத்தில்.
கீழ்க்கரையின் வெள்ளலைகள் கிளரோசை தொடர்ந்தொலிக்க
ஆழ்கடலின் மேலாக அயப்பாதை சென்றதுவே!
(அயப்பாதை = இருப்புப்பாதை)
மாகடல்மேல் கூண்டிட்டு மாகால்கள் தாங்குகின்ற
நீளரவின் என்பு ஒத்து நீண்டுசெல்லும் கடற்பாலம்
எங்கே ஏகும் எனவினவ எதிர்இருக்கை பயணிசொன்னார்
(இ)லங்கையின் வடமுனையாம் காங்கேசன் துறையென்றார்.
(நீளரவின் என்பொத்து = நீண்ட பாம்பின் எலும்புக்கூடு போன்று)
இருபதுஇரு நூறாய்க்காண் திறன்பெற்றேன் கனவுலகில்
கருப்பெழுத்தில் தூரத்தில் கட்டமஞ்சள் பலகையொன்றில்
என்தமிழில் அதனடியில் இந்தியத்தில் இங்கிலத்தில்
சொன்னதுஇவ்வூர் குழகேசர் வாழ் கோடிக்கரைஎன்று.
(இந்தியம ¢= இந்தி, இங்கிலம ¢=ஆங்கிலம்)
பாராத உலகிலுமே பார்க்கவும் இயலாத
கார்ஆர்ந்த குழலழகி கல்கிமகள் பூங்குழலி
ஏர்ஆர்ந்த கன்னியவள் என்மனம்கொள் கள்ளியவள்
நீராடி நிலமாடி திளைத்திருந்த இடமிதுவே!
தென்கரையின் கீழ்க்கரையின் தரங்கொலிகள் தன்ஒலியாய்,
வென்றுநிற்பாள் துச்சமென வெகுஆழக் கடற்பாதை.
மாகடலின் நீர்த்தளும்பல் தாலாட்டாய் கொண்டவளாம்
வேகமிகு வீரமிகு நெய்தல்மண் பெண்ணரசி.
(நெய்தல ¢= கடலும் கடல் சார்ந்த இடமும்)
அவள்சென்ற இப்பாதை இதுகுழலிப் பாதை
அதனடியில் கடலாழம் பதிமூன்று மீட்டராகும்
அதிர்கின்ற பூமியையும் ஆழிப் பேரலையையும்
எதிர்கொள்ளும் வகையான ஏற்றமிகு கட்டுமானம்!
(அதிர்கின்ற பூமி = பூகம்பம், ஆழிப் பேரலை = சுனாமி)
கடல்மேலே பலமீட்டர் உயர்நின்றுக் குறுக்கிட்டுத்
தடமேகும் நாவாய்க்காய் திறப்பெல்லாம் செய்துவைத்தார்
பணிசெய்த பொறியரின் பாங்கினை வியந்துநிற்க
இனியதோர் சங்கொலியில் இப்பயணம் தொடங்கிற்று.
(நாவாய்=கப்பல், பொறியர ¢= கட்டிடப் பொறியாளர்கள்)
சடுதியில் செலுத்திய சகடைகள் உயிர்த்தன
கடல்நடு கூண்டினில் காட்சிகள் விரிந்தன
தூரத்துக் கலங்கள் துண்டுகளாய்த் தோன்ற,
ஈரமாய்க் கயற்கொத்து அரிதாய்க் காண,
ஏகாந்தப் பறவை என்னை மயக்க,
ஆகாய நீலம் ஆழ்மனம் துய்க்க,
அரைமணிப் பயணம் அடைந்தது துறையும்
வரைநடு தீவின் வடமுனை வந்தேன்.
ஏலேல சிங்கனும் மாறனும் சோழனும்
மார்தட்டிப் பொருது மாவீரம் சொறிந்த,
கேதீசரனொடு கதிர்காமன் அருள்செயும்,
ஓதி வரங்கொள் ஓர்அரக்கன் வதம்செய
மாலவன் கால்வைத்த இலங்கை மண்ணில்
மாதவப் பயனாய் கால்பட மகிழ்ந்தேன்.
ஒற்றையாய் குழலி அன்றுசெய்த வேலை
கற்றைப் பொறியரின் இற்றை சாதனை.
நானுமோர் பொறியன் நன்றாய் சிலிர்த்தேன்
காணுகின்ற கனவும் சிலிர்ப்பால் சிதைய
இரண்டாயிரத்தொன்பது வந்தேன்
இரண்டாயிரத்திருபதிலே எம்மனார்
சிறப்புக்கு இஃதொரு பருக்கை பதமே!
(கயற்கொத்து = மீன்கூட்டம்)
(வரை=மலை, வடமுனை = வடக்கு முனை)
(மாறன ¢= பாண்டியன்)
(ஓதிவரங்கொள்ஓர்அரக்கன ¢= ராவணன்)
ஓவியம்: ஜெ.சந்திரசேகரன்
About
S. Natarajan is a engineering consultant and has penchant for writing Marabukkavidai ( Tamil Poetry ) and science fictions in tamil. His affinity towards the fictious character Poongulazhi of PS reflects in his poetry. Many of his stories have been published and he is one of the active members of REACH Foundation



