You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / கல்கியின் கதாநாயகியர் - மாலதி மகாதேவன்

கல்கியின் கதாநாயகியர் - மாலதி மகாதேவன்


By humble - Posted on 24 February 2010

கல்கியின் கதாநாயகியர்

மாலதி மகாதேவன்

அமரர் கல்கி அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் பெண்களை கைப்பாவைகளாக, அலங்காரப் பொருட்களாகவே சித்தரித்து வந்தனர். அந்த காலத்து நாவல்கள் அதுவும் சரித்திர நாவல்களில் பெரும் பான்மையான பெண்கள் வெறும் பொம்மை போன்ற அழகுப்பதுமைகள், தனக்கு என்று ஒரு கருத்தோ அபிப்ராயமோ உணர்ச்சியோ இல்லாமல் ஆண்களளுக்கு முற்றிலும் அடங்கியவர்கள். ஒரு பெண் அழகாக உடை அணிவது கூட அவளது பண்பிற்கு எதிராக, அடக்கம் இன்றி உள்ள செயலாக அக்கால கட்டத்தில் கருதப்பட்டது. அவரது எழுத்துகளிலும் அந்த பாதிப்பு இல்லாமல் இல்லை. இருந்தாலும் காந்தியடிகள், தாகூர் போன்ற பெரியவர்களின் பாதிப்பின் காரணமாக அவர் சற்று முற்போக்கான பெண் கதாநாயகியர்களைச் சித்தரித்து இருக்கிறார். அவரது எழுத்து பெண்கள் மத்தியில் பல வருடங்கள் கழித்தும் அழியா தன்மை பெற்று இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். அவரது கதாநாயகிகளில் என் மனதை கவந்தவர் பலர் - சிவகாமியின் சபதம் 'சிவகாமி', பொன்னியின் செல்வன் 'பூங்குழலி', 'குந்தவை', 'நந்தினி', 'செம்பியன் மாதேவி', கள்வனின் காதலி 'கல்யாணி' மற்றும் தியாக பூமி 'சாவித்ரி'. கல்கி இவர்களை நேரடியான புரட்சி பெண்களாக சித்தரிக்கவில்லை (சாவித்ரியை தவிர)ஆனால் பொம்மைகளாக இல்லாமல் ரத்த சதை உள்ள மனித ஜீவன்களாக, ஒரு பக்குவமடைந்த ரசிகன் எந்த காலத்திலும் ரசிக்கும் நிஜ உருவங்களாக சித்தரித்து இருக்கிறார்.

41-PS02

சிவகாமி - நாட்டிய கலையில் சிறந்து விளங்கியதோடு சுய மரியாதையும் கடமை உணர்ச்சியும் நிறைந்த பெண். அரச குமாரனை காதலித்தாலும் தன் எளிய குடும்ப சூழல் அந்த காதலுக்கு தடையாக இருக்கலாம் என்பதை அவள் சற்றும் மறப்பது இல்லை. பலர் சிவகாமியை ராமாயண சீதைக்கு ஒப்பிட்டு கூறுவார்.சீதை கணவன் மேல் பெரும் நம்பிக்கை கொண்ட அடக்கமும் சாந்த குணமும் நிறைந்த பெண். ஆனால் சிவகாமி பிடிவாதமும் சீற்ற குணமும் அதிகம் கொண்டு தன் வழி தவறாக இருந்தாலும் அதில் உறுதி உள்ளவளாகக் காணப்படுகிறாள். இறுதியில் காதல் தோல்வியால் மனம் உடைந்து சிதறிப் போகாமல் தன் கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்கிறாள் . நிறைவேறும் காதல், இல்லை என்றால் தற்கொலை என்ற இரண்டே முடிவுகள் இருந்த அக்காலத்தில் இத்தகைய முடிவும் சோகத்தை தந்தாலும் நிறைவும் மதிப்பும் தருகிறது.

பொன்னியின் செல்வனில் பல பெண் கதா பாத்திரங்களில் பூங்குழலி ஏன் இன்னும் பலரது மனம் கவர்ந்த பெண்ணாக இருக்கிறாள் - பூங்குழலி வீட்டு (அல்லது அரண்மனையோடு) ஆண் பாதுகாப்பில் அழகு பதுமையாக வாழவில்லை. அவள் பயமோ கட்டுப்பாடோ இன்றி அலை பாயும் கடலில் படகோட்டுவது , புலியை கல்லால் விரட்டுவது என்று மட்டும் அல்லாமல் கடமை வீரனான அருள்மொழி வர்மனையே கவரும் அளவுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள பெண்.

பொன்னியின் செல்வன் குழுமத்தில் ஒருவர் கூறினார் - இந்த பெண்ணை திருமணம் செய்தால் நிச்சயமாக விவாகரத்துதான் என்று! உண்மையான கூற்று. ஏன் என்றால் பூங்குழலி போன்ற பெண்ணோடு வாழ சாதாரண ஆண்களால் சற்று கடினம் தான்! அவளை சேந்தன் அமுதன் போன்ற மிகவும் அடக்கமான ஒரு ஆடவனோடு இணைத்தது சற்று நம்ப கடினமாக இருந்தாலும் - தைரியமான பெண்களை மணந்த அடக்கமான ஆடவர் பலர் உண்டு என்பதை நினைவில் கொள்ளலாம். குந்தவையும் செம்பியன் மாதேவியும் ஏற்கனவே வரலாறு அறிந்த மதிப்பிற்குரிய அரச குல பெண்கள். கல்கியின் கை வண்ணத்தில் அது உண்மையாக இருந்தாலும் குந்தவை உடன் கட்டை ஏறுவது பற்றி பெருமையாக பேசுவது சற்று ஏற்றுக்கொள்ளக் கடினமாக உள்ளது. அவரது தாயார் உடன் கட்டை ஏறினார் என்று வரலாறு கூறுவதால் இதை காலத்திற்கு ஏற்ற கருத்தாக கொள்ளலாம். செம்பியன் மாதேவி சிவபக்த சிரோன்மணியாக தென்படுகிறார் - பெற்ற பிள்ளையையும் வளர்ப்பு பிள்ளையையும் ஒரு போல பாவிக்கும் போது அவரது பரந்த உள்ளம் ரசிகர்கள் மதிப்பை பெறுகிறது.

நந்தினி - பொன்னியின் செல்வனில் நந்தினியை விட அதிகமாக ரசிகர்கள் மனம் கவர்ந்த பெண்மணி யாரும் இல்லை என்று சொல்லலாம். நந்தினியின் பிறப்பின் மர்மம், கதை இறுதியில் அவள் என்ன ஆனாள் என்று பல கேள்விகள் இருந்தாலும் - அவளை பொன்னியின் செல்வனின் வில்லியாகத்தான் பலரால் கருதப்படுகிறாள் . ராமாயணம் படிப்பவர் கைகேயி மேலோட்டமாக கெட்டவளாக நினைப்பது போல அவளும் சுய நலக்கரியாக பலரை தன் நலத்துக்காக பயன் படுத்துபவளாக இருக்கிறாள். ஆனால் சற்று ஆழமாக கவனித்தால் ஒரு அனாதையாக வளர்ந்து பல கஷ்டங்கள் அனுபவித்து அறிவிலும் அழகிலும் அரச குடும்ப பெண்களை போல் இருந்தாலும் அவர்கள் நிலைமைக்கு வர பெரு முயற்சி செய்யும் தளரா நெஞ்சம் கொண்ட பெண்ணாக அவளை காணலாம். அவள் நிச்சயமாக புரட்சி எதுவும் செய்யா விட்டாலும், அவளது விடா முயற்சியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டலாம்.

கள்வனின் காதலியின் 'கல்யாணி' இளம் விதவை - ஒரு கொள்ளைக்காரனை காதலித்து அவனுடன் ஓடிப்போவதற்குக்கூட அஞ்சா நெஞ்சம் படைத்தவள். கள்வனின் காதலி எழுதப்பட வருதம் 1937 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அக்காலத்தில் விதவைகளை மொட்டை அடித்து வீட்டு மூலையில் உட்கார வைப்பது மிக மிக சகஜம். ஒரு விதவை இன்னொருவனை காதலிப்பதே புரட்சி. அதற்கு மேல் அவனுடன் ஓடிப்போக இசைவது அதை விட பெரிய புரட்சி. கதையின் வேறு எந்த பகுதியையும். கருதாது இதை மட்டும் நினைவில் கொண்டாலே கதாசிரியர் மீது நமக்கு பெருமதிப்பு ஏற்படும். இறுதியாக தியாக பூமி சாவித்ரி , முன்பு பார்த்த பெண்களைப் போல் வேறுபாடுகள் இல்லாத நேரடியான புரட்சிப்பெண். ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்து, செவிலித்தாய், பின் மாமியார், முறை தவறிய கணவன் என்று பல கொடுமைகளை அனுபவித்து பின் உமா ராணி என்ற பெயரில் பணமும் வசதியும் உள்ள தனிப்பென்னாக வாழ்கிறாள். முறை தவறிய கணவனை ஜெயிலில் இருந்து மீது வரும் முதல் தமிழ் கதாநாயகி சாவித்ரி. மீண்டும் இந்த கதை எந்த காலத்தில் எழுதப்பட்டது (1939) என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாவித்ரியின் கணவன் அவளிடம் மன்னிப்பு கோரி மீண்டும் இனிது வாழ வரும் போது 'தர்வான் அவரை வீட்டை விட்டு வெளில போக சொல்லு' என்ற சாவித்ரியின் ஆணித்தரமான சொற்கள் படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரும் தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

'நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்' என்று மகாகவி பாரதி பாடிய புதுமை பெண்களுக்கு உதாரணமாக கல்கி இந்த பெண்களை படைத்தது இருக்கிறார். அவருக்கு செய்யும் நன்றியாக இன்றைய இளைய தலைமுறையினரிடம் நாமும் இக்கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். துணிவான செயல்களுக்கு துணை இருக்கும் காலத்தில் அவற்றை செய்வது எளிது - ஆனால் துணை ஏதும் இன்றி தன் சிந்தையும் துணிவும் மட்டுமே துணையாக செயல் புரிந்தவர்கள் எத்தனை என்பதை இந்த கதைகள் வழியாகவும் கதாசிரியரின் வாழ்க்கை மூலமாகவும் புரிந்து கொள்ளலாம்.

Visitor Map

Locations of visitors to this pagecounter for wordpress

Navigation