You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / கைத்தலம் - ஓகை நடராஜன்
கைத்தலம் - ஓகை நடராஜன்
கைத்தலம்
ஓகை நடராஜன்
சோம்பல் முறித்த சூரியன் கீழ்திசையில் உதிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், அந்த சிறு ஊர்வலம் மெதுவாக வடபெண்ணை நதியைக் கடந்து கொண்டிருந்தது. ஒரு பல்லக்கும், இரண்டு எருதுகளும், ஒரு குதிரையும், ஏழு ஆட்களும் கொண்டிருந்தது அக்குழு. அந்தக்குழுவை தொலைவில் தென்கரையிலிருக்கும் தனிக்கரை என்ற ஊரிலிருந்து பார்த்தவர்களுக்கு எறும்புக் கூட்டமொன்று இரை சுமந்து ஊர்ந்து வருவதைப் போலிருந்தது.
வரலாற்றின் பல நிகழ்வுகளின் மௌன சாட்சியான வடபெண்ணை, இப்போது சோழப்பேரரசின் வடக்கு எல்லையாக பெருமை கொண்டிருந்தது. இரண்டாம் ஆதித்தன் என்ற வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலசோழன் சோனாட்டின் வடதிசை மாதண்ட நாயகராக கோலோச்சிக் கொண்டிருந்தார். சோழப்பெரும் சேனையின் எல்லைக் காவல் படை அந்நதியின் தென்கரையில் ஆங்காங்கே முகாமிட்டிருந்தது. இப்படையில் பெருவீரர்கள் சிலர் இருந்தார்கள். தனிக்கரையில் படகுத் துறை போன்றிருந்த ஓரிடத்தில் முகாமிட்டிருந்த எல்லைக்காவல் படையில் சிலருக்கோ அந்தப் பணி அத்தனை சுரத்தானதாக இல்லை. ஆனால் எப்போதோ வரும் ஒரு சிலரைத் தவிர ஆள் நடமாட்டமில்லாத அந்த படகில்லாத படகுத்துறையை சோழசேனையின் தலைவர்கள் அலட்சியப் படுத்தவில்லை. துரோகிகளும் விரோதிகளும் வாகாக எல்லையைக் கடந்து சோனாட்டின் உள்நுழைய ஏதுவான தனிக்கரையில் பொறுக்கி எடுத்த வீரர்களையே நியமித்திருந்தார்கள். அப்படகுத் துறையின் கிழக்கிலும் மேற்கிலுமாக எல்லைக்காவலின் இரண்டு சிறுகுழுக்கள் முகாமிட்டிருந்தன. அந்த ஊர்வலம் அந்தப் படகுத்துறையை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தது. கரைக்கு வந்ததும் அந்தக்குழு ஒரு நாட்டியக் கோஷ்டி என்பது தெரியவந்தது. எருதுகளின் மேல் அவர்களுடைய இசைக்கருவிகளைக் கட்டியிருந்தார்கள். பல்லக்கிலிருந்து யௌவனத்தின் முழுப்பயனையும் தனதாக்கிக் கொண்டவள் போலிருந்த ஓர் இளம்பெண் வெளியே வந்தாள். அவளே அக்குழுவின் தலைவி போலும். வாட்டசாட்டமான ஒரு படைவீரன் அவர்களை விசாரித்தான்.
யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள்? ஏன் செல்கிறீர்கள்? இது சோழப் பேரரசு.
அடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அந்தப் பெண் வேறு மொழியில் நளினமான குரலில் தௌ¤வாகப் பதில் சொன்னாள். கிருஷ்ணைநதிக்கரை நகரொன்றிலிருந்து வரும் நாட்டியக் கோஷ்டி என்றும், ஸ்ரீகாளஸ்தியில் இப்போது முகாமிட்டிருக்கும் பார்த்திபேந்திர வர்மரின் அழைப்பின் பேரில் அங்கு செல்வதாகவும், இரண்டு பணிப்பெண்களும் ஐந்து இசைக்கலைஞர்களும் கொண்ட இக்குழுவுடன் இன்னும் மூன்றுபேர் பின்னர் இணைவார்கள் என்றும் குறிப்பிட்டாள். இப்படி ஒரு கோஷ்டி வருவது தனிக்கரை முகாமுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த கேள்வியையோ அல்லது அதன் கடுமையையோ குறைக்குமளவுக்கு இருந்த அவளது பதிலால் கெடுபிடி மறைந்து உபசரிப்புடன் அவர்கள் சோனாட்டில் நுழைந்தார்கள்.
ஆனால் அவர்களுடன் இணைந்துகொள்வதாகச் சொல்லி பின்னர் வந்த மூன்றுபேருக்கும் நாட்டியத்துக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. குதிரையில் வந்த அவர்கள் வீரர்கள் போலவும் தெரியவில்லை. இவர்களை ஐயத்துடனே அனுமதித்த அந்த வீரன் உடனே ஒரு காரியம் செய்தான். சற்று இடைவெளிவிட்டு இரண்டு வீரர்களைப் பின் தொடரச் செய்தான். அவனது சந்தேகம் உறுதியானது. நாட்டிய கோஷ்டியின் மூன்று புரவிக்காரர்களும் மூன்று வெவ்வேறு திசைகளில் சென்று விட்டார்கள், எவருமே ஸ்ரீகாளஸ்தியை நோக்கிச் செல்லவில்லை என்ற செய்தியோடு இருவரும் திரும்பிவந்தார்கள்.
முன்பாகவே இதனை ஊகித்து வைத்திருந்த அந்த வீரன் பல முடிவுகளை ஒரே நேரத்தில் தீர்மானித்தான். தீர்மானிப்பதற்கும் தீர்மானித்ததை செயலில் காட்டுவதற்கும் நேரபேதம் தெரியாத அவன் மூன்று வீரர்களை ஐயத்துக்கிடமான அந்த மூவர் சென்ற திசையில் செல்லப் பணித்தான்.
சூரிய அஸ்தமனம் கழிந்த அரை நாழிகைக்குள் ஆலங்காட்டு ஈசன் கோயிலுக்கு வடக்கே அரைக்கல் துரத்தில் இருக்கும் நரிக்காட்டுக்கு வந்துவிடுங்கள்.
அங்கே பகலிலேயே யாரும் செல்ல மாட்டர்களே, பேய் பிசாசுகள்....
நம்மைவிட பெரிய பிசாசுகள் யார் இருக்கிறார்கள்? ஆலங்காட்டு சிவனையும் காரைக்கால் அம்மையையும் நினைத்துக் கொள்ளுங்கள். வாதிட இது சமயமில்லை. உங்களுக்கு கிடைத்த செய்தியுடன் காத்திருங்கள், நான் உங்களை அங்கு வந்து சந்திக்கிறேன். இரவுக்காவலுக்கு நீங்கள் மறுபடியும் இங்கு வந்துவிட வேண்டும். புரிந்ததா?
முவரின் குதிரைகளும் சீறிப் பாய்ந்தபின் இன்னும் இருவரை அழைத்துக் கொண்டு ஸ்ரீகாளஸ்தி சாலையில் விரைந்தான். மூன்று நாழிகை நேரத்தில் அந்த நாட்டியக் கோஷ்டியைப் பிடித்தான்.
பெண்ணே, உன் பெயரென்ன?
சிவமஞ்சரி
உன்னுடன் வந்த ஒருவனைக் காணவில்லையே, உங்கள் குதிரையையும் காணவில்லை?
அரிதாரங்கள் சிலது வாங்க காஞ்சி சென்றிருக்கிறான். மாலைக்குள் வந்துவிடுவான்.
உங்கள் பேரில் எனக்கு சந்தேகமிருக்கிறது. இந்த வீரர்கள் உங்களுடன் வருவார்கள். ஸ்ரீகாளஸ்திக்கு சற்று தூரம் முன்பாகவே நீங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுவீர்கள். என் ஐயங்கள் தீர்ந்தால் மாலைக்குள் நீங்கள் பார்த்திபேந்திரவர்மரின் பாசறைக்கு அனுப்பப்படுவீர்கள். ஏதேனும் தகராறு செய்தீர்களோ பெண்களுக்கு தஞ்சாவூர் பாதாளச் சிறையும் ஆடவர் அனைவருக்கும் பரலோகமும் கிட்டும். புரிந்ததா?
சிவமஞ்சரி பேசவே இடங்கொடாமல் அத்தனையும் பேசிவிட்டான் அந்த வீரன். அவனை ஏறிட்டு அவள் பேச எத்தனித்தபோது அவனே மீண்டும் சொன்னான்,
பெண்ணே, தொண்டை மண்டலாதிபதியும் ஆதித்தசோழரின் வலதுகரமுமான பார்த்திபேந்திரரின் அழைப்பின் பேரில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை மரியாதையாக நடத்தவேண்டியது எங்கள் கடமை ஆனால் இப்போது உங்கள் கோஷ்டியை நாங்கள் மரியாதையாக நடத்தவேண்டியது உங்கள் நடத்தையைப் பொறுத்திருக்கிறது, என்று சொன்னவன் தன் வீரர்களைப் பார்த்து சொன்னான்,
ஸ்ரீகாளஸ்திக்கு நான்கு கல் முன்பாக வரும் சோமங்கலம் கிராமத்தில் வாலாம்பாள் கிழவி வீட்டில் இவர்களை சிறை வைத்துவிடுங்கள். முரண்டு பிடித்தால் கைகளைக் கட்டிவிடுங்கள் வாலாம்பாள் என்றால் அந்த கிராமத்தில் அனைவரும் அறிவார்கள். சற்று நேரத்தில் இன்னொரு சோழ வீரனும் உங்களுடன் சேர்ந்துகொள்ள அனுப்புகிறேன். மாலைக்குள் என்னிடமிருந்து செய்தி வந்து சேரும், அதன்படி செய்யுங்கள்
கட்டளை போலவும் மந்திரம் போலவும் சொல்லிவிட்டு அவன் காஞ்சி நோக்கி வெகுவேகத்தில் விரைந்தான்.
பார்த்திபேந்திர வர்மனின் அந்தரங்க உதவியாளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மத்தியானத்துக்கு வெகு நேரம் முன்பாகவே வந்து சேர வேண்டிய நாட்டியக் கோஷ்டி இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை. இன்றரவு பாசறையின் கேளிக்கைக்கு அவள் நாட்டியம் நடைபெற வேண்டும். தயங்கித் தயங்கி பார்த்திபேந்திரனிடம் இதைத் தெரிவித்தபோது அவன் வெடித்தான்.
வேங்கியிலிருந்து ஒரு குழு வரும் போது நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மூடர்களே, அதிகாலையில் அவர்கள் வடபெண்ணையைத் தாண்டிவிட்டார்கள் அல்லவா?
அந்த செய்தி வந்துவிட்டது அரசே, அதனால்தான் குழப்பம் அதிகமாகி உங்களிடம் வந்தோம்.
உடனே தேடுங்கள். வடபெண்ணை படகுத் துறைவரை புரவியாட்களை அனுப்புங்கள். என்று உறுமிச் சென்றான் பார்த்திபேந்திரன். இரண்டு புரவியாட்கள் வேகமாகக் கிளம்பினார்கள். ஆனால் அந்த அறிவுக் கொழுந்துகள் சோமங்கலத்தைத் தாண்டியபிறகே அக்கம் பக்கத்தில் விசாரித்துச் சென்றார்கள். வடபெண்ணைக் கரை வரை சென்று அவர்கள் விஷயம் அறிந்தபோது இங்கே சோமங்கலத்தில் வேறு நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன. காஞ்சியிலிருந்து நமது வீரன் அனுப்பிய ஒரு வீரன் வாலாம்பாள் வீட்டுக்கு வந்தான். உடனே அந்தநாட்டியக் கோஷ்டி ஆடவர்களின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டன. சிவமஞ்சரியின் கரங்கள் மெல்லிய மணிக்கயிற்றால் கட்டப்பட்டது. சிவமஞ்சரி சீறினாள்,
சோழர்களின் அட்டூழியங்களைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் சரிதான் போலிருக்கிறது. ஒரு கேள்வி முறையே கிடையாதா?
சோனாட்டுக்கு உளவு பார்க்க ஒரு நாட்டிய கோஷ்டி போல் வந்திருக்கும் உங்களுக்கு இந்த மரியாதையே அதிகம்தான். ஆதித்த கரிகால தேவர் ஸ்ரீகாளஸ்திக்கு வந்துகொண்டிருக்கிறார். இனி அவருடைய கருணையைப் பொருத்ததே உங்கள் வாழ்வு. இப்படிச் சொன்ன அந்த காஞ்சி வீரன் பிறகு அங்கிருந்த காவல் வீரர்களிடம்,
மாலை விசாரணை வரை யாரிடமும் எந்த தகவலும் சொல்லாதீர்கள், பார்த்திபேந்திரவர்மரிடமும் கூட சொல்ல வேண்டாம். இது ஆதித்தரின் கட்டளை. மேலும் நமது எல்லைக் காவல் வீரன் சொன்ன சில செய்திகளை அந்த வீரர்களுக்குச் சொல்லிவிட்டு ஸ்ரீகாளஸ்தியின் புறக்காவல் பாசறைக்கு விரைந்தான். ஆதித்த கரிகாலரின் ரகசியமான இந்த திடீர் விஜயத்துக்கு சில காரியங்களை அவன் உடனே செய்யவேண்டியிருந்தது.
அதன் பிறகே பார்த்திபேந்திரனின் புரவியாட்கள் பரபரப்பாக சோமங்கலம் வந்தார்கள். வாலாம்பாளின் வீடு அல்லோலகல்லோலப் பட்டது. அங்கிருந்த அனைவரையும் வாலாம்பாளையும் சேர்த்து பார்த்திபேந்திரனின் பாசறைக்குக் கொண்டுவந்தார்கள். ஆலங்காட்டு நரிக்காட்டில் தம் சகாக்களைச் சந்தித்து விவரங்களைப் பெற்றுக் கொண்ட நமது எல்லைவீரன் வாயு வேகத்தில் ஸ்ரீகாளஸ்தி வந்து சேர்ந்தான். ஆதித்தகரிகாலரும் ரகசியமாய் ஸ்ரீகாளஸ்தியின் புறக்காவல் பாசறைக்கு வந்து சேர்ந்தார். இதற்குள்ளாகவே பார்த்திபேந்திரவர்மன் தன் விசாரணையை ஆரம்பித்திருந்தான்.
சோர்ந்திருந்த சிவமஞ்சரியும் அவள் குழு ஆட்களும் பார்த்திபேந்திரனின் உபசரிப்பில் சற்று தௌ¤ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அந்தப் பாசறை ஒரு பெருவீடு. அதன் முற்றத்தில் நடுநாயகமாக பார்த்திபேந்திரன் தன் உதவியாட்கள் புடை சூழ அமர்ந்திருந்தான். வலது புறத்தில் சற்று தள்ளி சிவமஞ்சரியும் அவளது குழு ஆட்களும் ஒரு தரை விரிப்பில் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் பின்னே இசைக்கருவிகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த விசாரணையை அவசரமாக முடித்துவிட்டு உடனே நாட்டியம் ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்தானோ என்னவோ, பார்த்திபேந்திரன் சூடாக விசாரணையை நடத்தினான். எதிரே எல்லைக்காவல் வீரர்கள் அடங்கி ஒடுங்கி நின்றிருந்தார்கள். கூரிய வேல் வீரர்கள் நால்வர் அவர்களுக்கு அரண் போல் சுற்றி நிற்க வாலாம்பாள் அவர்கள் அருகே நின்றிருந்தாள். வந்திருக்கும் நாட்டியக் கோஷ்டியை விட எல்லைவீரர்களையும் வாலாம்பாளையுமே விசாரணைக்குரியவர்களாக பார்த்திபேந்திரன் முடிவு செய்திருந்தான் போலும். அனல் கக்கும் தன் முதல் கேள்வியை எல்லை வீரர்களின் மேல் வீசினான்,
இவ்வளவு களேபரத்துக்கும் காரணமான அந்த மட வீரன் இங்கே இருக்கிறானா?
ஐயா, அவர் காஞ்சிக்கு சென்றிருக்கிறார்.
அவனை எப்போது பிடிக்கலாம்?
இப்போதுகூட அவர் இங்கு வரலாம். ஆனால் தனிக்கரை படகுத்துறைக்கு இரவுக் காவலுக்கு வந்துவிடுவார்.
ஏது அவனுக்கு மரியாதை பலமாயிருக்கிறது? அங்கு படைத்தலைமை முனிசேகரன்தானே, அருகில் கந்தவேள் மாறன் இல்லையா?
அவர்கள் அரசாங்க காரியமாக தஞ்சைக்கும் கடம்பூருக்கும் சென்றிருக்கிறார்கள்.
ஓ, அதான் தலையில்லாத இடத்தில் வால் ஆடியிருக்கிறதா.
...................
ஏ கிழவி ஏதோ ஒரு மடவீரன் சொன்னால் நீ அவன் இஷ்டப்படி ஆடுவாயா? இது என்ன தான்தோன்றித்தனமான வேலை? எதையும் செய்ய அதிகாரம் உள்ளவர்கள்தான் சொல்லவேண்டும் என்ற சாதாரண அறிவு கூடவா இவ்வளவு வயதாகியும் உனக்கு வரவில்லை?
......................
என்னுடைய அழைப்பின் பேரில் வந்தவர்களை இப்படி நடத்துவதற்கு எவ்வளவு திமிர் பிடித்திருக்கவேண்டும் அந்தக் கயவனுக்கு? சிறுக்கி ம...............
வாலாம்பாள் குறுக்கிட்டாள், அரசரே, அந்தத் தம்பியைப் பற்றி அவமானமாய் ஏதும் சொல்லவேண்டாம். அந்த நாட்டிய கோஷ்டியை விசாரித்தால் உண்மை வெளிவரும்.
ஓ, அவ்வளவு மரியாதையா அவனுக்கு. இருக்கட்டும் பார்க்கிறேன். பிறகு சிவமஞ்சரியைப் பார்த்துக் கேட்டான்,
எந்த முகாந்திரத்தில் உங்களை அவன் சிறை வைத்தான்?
குரலை சரிபடுத்திக்கொண்டு வேறு மொழிகள் கலந்த உடைந்த தமிழில் அவள் சொன்னாள்,
நாங்கள் ஒற்றர்களாம்.
என்ன ஆதாரம்?
யாமறியோம். அரசர் பெருமானே, நாங்கள் நாட்டியமாடவே இங்கு வந்தோம். அதுவும் உங்கள் அழைப்பின் பேரில் வந்தோம். சிறிது பொன்னுக்கும் சோனாட்டுப் புகழுக்கும் ஆசைப் பட்டு வந்த எங்களை இப்படித் துன்புறுத்துதல் தகுமா? என்றாள் சிவமஞ்சரி.
அப்போது அந்தப் பாசறையில் சலசலப்பும் பிறகு பரபரப்பும் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலருக்குரிய புகழ்மொழிகளை காவல் வீரர்கள் உரத்துக் கூவினார்கள். பார்த்திபேந்திரன் சற்றும் எதிர்பாராத அந்தத் தருணத்தில் ஆதித்த கரிகால சோழர் அந்த விசாரணைக் கூடத்தில் நுழைந்தார். அவர் பின்னால் நெடிதுயர்ந்த நமது எல்லை வீரனும் வந்தான். மின்னல் வேகத்தில் ஆதித்தருக்கு ஆசனம் போடப்பட்டது.
பார்த்திபேந்திரன்,வரவேண்டும் ஆதித்தரே, உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை!
ஏதோ புது குழப்பம் போலிருக்கிறதே, பார்த்திபா!
நமது வடக்கு எல்லைக்காவலின் ஒரு மட சிகாமணி செய்த குழப்பம். நானே பார்த்துக் கொள்வேனே ஆதித்தரே, இது ஒரு சிறு பிரச்சனைதான்.
பிரச்சனை சிறியதா அல்லது பெரும் பிரச்சனையின் சிறுநுனியா என்பதை விசாரித்துவிடலாம், பார்த்திபா. தொடரட்டும் உன் விசாரனை.
நமது வீரன் ஆதித்தரின் ஆசனத்துக்கு வலப்புறம் நின்றுகொண்டான். பார்த்திபேந்திரன் எல்லைக்காவல் வீரர்களைக் கேட்டான்,
தொண்டைமண்டலத்தின் அதிகாரியான நான் இவ்வளவு அருகில் இங்கே ஸ்ரீகாளஸ்தியில் முகாமிட்டிருக்கும்போது இப்பிரச்சனையை ஏன் காஞ்சிக்கு இட்டுச் சென்றான் அந்த மகாமடையன்?
நமது வீரன் பதில் சொல்ல முன்செல்ல எத்தனித்தபோது அவன் இடக்கரத்தின் மணிக்கட்டைப் பிடித்தார் ஆதித்த கரிகாலர். நமது வீரனும் சமிக்ஞை புரிந்து அசையாமல் நின்றான். ஆதித்தர் நமது வீரனின் மணிக்கட்டை பிடித்தபடியே வைத்திருந்தார். எல்லை வீரர்களில் ஒருவன் சொன்னான்,
மன்னரே, அவர் இவர்களுடன் வந்த புரவிவீரர்களைத் துரத்திக் கொண்டு காஞ்சிக்கு சென்றிருக்கலாம்.
சிவமஞ்சரி, உங்கள் துணைக்காக வந்தவர்கள் காஞ்சி செல்ல வேண்டிய காரணம்?
அரசரே, எங்களுக்குத் தெரிய நியாயமில்லையே, எங்களுக்கு நேர்ந்த கதியைக் கேட்டு அவர்கள் திசை மாறியிருக்கலாம்.
பெண்களை எப்படி நடத்துவது என்று தெரியாத நிர்மூடன். தடியெடுத்ததால் தண்டல்காரன் ஆனானா? அகங்காரம் தலைக்கேறிய அவன் மட்டும் என் கைகளில் சிக்கட்டும்.....
இப்போதும் பதில் சொல்ல எத்தனித்தான் நமது வீரன். அப்போது ஆதித்தர் தன் வலது கரத்துக்குள்ளிருந்த அவன் மணிக்கட்டை வலுவாக அழுத்தினார். நமது வீரன் அமைதியானான். ஆனால் தன் மணிக்கட்டில் ஏற்பட்ட ஆதித்தரின் அழுத்தத்தை ஈடு கட்ட தன் இடதுகை முஷ்டியை இறுக்கினான். அந்த முஷ்டி இறுக்கத்தின் வலுவை ஆதித்த கரிகாலரின் கரம் உணர்ந்தது. தனது அழுத்தத்துக்கு சற்றும் குறையாத எதிர் அழுத்தத்தை, வீரத்தின் விளைநிலமும் களமுமான ஆதித்தர் அதிசயித்தார்.கிட்டத்தட்ட ஆராதித்தார் என்றே சொல்லவேண்டும்! அதிலும் அது தன் வலக்கரத்தின் அழுத்தத்துக்கு இடது முஷ்டியால் மரியாதையாகத் தந்த எதிர்வினை! ஆதித்தர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நட்பின் விதை அங்கே வீரமாக ஊன்றப்பட்டது போலும். அந்த அழுத்தக்காரனை அவர் அப்போது ஏற்றுக் கொண்டார். பிறகு எப்போதும் கைவிடவில்லை. தன்னுடன் வந்த ஒரு வீரரிடம் சைகை செய்தார். அவன் கூறத் தொடங்கினான்.
தொண்டைமண்டலத்து அதிபதி ஸ்ரீஸ்ரீபார்த்திபேந்திரருக்கு அடியேன் வந்தனம். இந்த நாட்டியக் கோஷ்டியில் உள்ளவர்கள் குற்றமற்றவர்கள். ஆனால் இவர்களுடனே குதிரையோடு வந்த ஒருவன் மட்டும் ஒற்றன். அவன் இப்போது காஞ்சியில் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டான். அவனுக்குச் செய்யப்பட்ட விஷேச விசாரனையில் விஷயங்கள் அனைத்தையும் கக்கிவிட்டான். இவர்களுக்குத் துணையாக வந்த மூவரை வடபெண்ணையின் வடகரையில் தாக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக மூன்று வேங்கிநாட்டு ஒற்றர்கள் நுழைந்துவிட்டார்கள். அவர்களை சந்தேகப்பட்டே இவ்வளவையும் கண்டுகொள்ள முடிந்தது. அவர்களில் இருவரைப் பிடித்துப் புறக்காவல் பாசறையில் காவலில் வைத்துள்ளோம். ஒருவன் இன்னும் பிடிபடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். மேலும் விவரங்கள் இந்த கோஷ்டியின் மத்தளத்தைச் சுற்றியிருக்கும் பட்டுத்துணியின் உட்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் லிகிதத்தைப் பார்த்தால் புரிந்துவிடும்.
உள்பக்கம் பருத்தியும் மேலே பட்டுமாக இருந்த அலங்காரமான அந்த மத்தள மேல்துணி அவசரமாக பிரிக்கப்பட்டது. உள்ளே மஞ்சளாக இருந்த துணியில் காவி மசியால் இவ்வாறு எழுதப்பட்டிருந்த்து,
வீரபாண்டியனின் ஆபத்துதவித் தலைவர் இரவிதாசருக்கு வேங்கிநாட்டின் சிற்றமைச்சன் சித்தண்ணராஜன் வரையும் நிரூபம். ஆதித்த சோழனின் அசைவுகளைக் கவனிக்க மூன்று வேங்கி நாட்டு ஒற்றர்களை தொண்டை மண்டலத்துள் செலுத்தியிருக்கிறோம். அவர்களைப் புரிந்து கொள்ளும் சங்கேத முத்திரைகள் கீழே வரையப்பட்டிருக்கின்றன. நாங்கள் இழந்த சோனாட்டின் வடக்கும் நீங்கள் இழந்த தென்னாடும் நமக்குக் கிடைக்கும் வரை நாம் ஓயோம். நமக்கு ஸ்ரீசைலேந்திரேஸ்வரரும் அன்னை மீனாட்சியும் அருள் பாலிக்கட்டும்!
இந்த வாசகங்களும் அதன் கீழே இருந்த முத்திரைச் சித்திரங்களும் பார்த்திபேந்திரனின் கோபத்தை உச்சிக்கு ஏற்றிவைத்தன. ஆசனத்திலிருந்து எழுந்துநின்று கூவினான்,
பாண்டிய நாட்டு ஒற்றர்களுக்கு என் மூலமாகவே துணை அனுப்பபடுகிறதா? இவர்களைப் பிடித்து சோனாட்டுக்கு பெரும் சேவை செய்த அந்த வீரன் யார்?
ஆதித்தர் தன் பிடியிலிந்து நமது வீரனின் மணிக்கட்டை விடுவித்தார்.
வீசத்துடிக்கும் வாளும் பாயத்துடிக்கும் வேலும்கொண்ட, காண்போர் நட்புகொள்ளும் முகவிலாசமும் கட்டுடலும் கலங்காத மனமும் கொண்ட, ஆதித்த கரிகால சோழனுக்கு ஈடான எதிர் அழுத்தம் தரக்கூடிய வீராதி வீரனான அவன் சபை முன்னே வந்தான். அத்தனை பேரின் மூச்சுக் காற்றும்கூட கேட்க முடியாத அமைதி அங்கு குடிகொண்டது. அப்பெருவீட்டின் வெப்பத்தை அதுகாறும் தணித்துக் கொண்டிருந்த மலைக்காற்றும் கூட நின்றுவிட்டதோ என்று தோன்றும்படியாக நாற்புரமும் எரிந்துகொண்டிருந்த தீவட்டிகளின் மெல்லிய சடசடப்பும் கூட நிசப்தமாகியது. அத்தனை செவிகளும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்ரீகாளஸ்திப் பாசறை முழுதும் நிறையுமாறும் அங்குள்ள ஒவ்வொருவரின் உள்ளத்தில் அழுந்துமாறும் தன் பெயரை நமது வீரன் சொன்னான:
‘‘ நான் வாணர்குலத்தோன்றல் வல்லவரையன் வந்தியத்தேவன்! ’’




