10ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தேன். சற்றுத் தாமதமாகச் செல்ல நேர்ந்தது. திருமதி.சுபா, திரு ஆண்டோ பீட்டர் ஆகியோரது உரைகளிலிருந்து முழுமையாக இருந்தேன். இருவருமே கச்சிதமாகவும் கனமாகவும் பேசினார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய சுருக்கமான தெளிவான அறிமுகத்தை அவர்கள் அளித்தார்கள்.
பிறகான சில பகுதிகளைப்பற்றி இங்கே கூறுகிறேன். சிறப்புச் சொற்பொழிவுகள்:- இவைதான் விழாவின் சுவையான பொருள்கொண்ட பகுதிகள்.
முதலில் பேசிய திரு.ராமச்சந்திரன் தொல்பொருள் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். 18ம் நூற்றண்டின் தமிழகத்தின் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய விஷயங்கள் சிலவற்றை மிக அழகாக உரைத்தார். கூறிய ஒவ்வொரு செய்தியும் சிந்திக்கவைத்தது. அவர்கூறிய பல செய்திகள் நமக்கு வியப்பையும் சுவாரஸ்யத்தையும் அளித்தன.
இரண்டாவதாகப்பேசிய திரு.செல்வக்குமார், 'கீழைக்காவிரிப் பகுதிகளில் புத்தசமயமும் தலங்களும்' பற்றி நல்லதொரு உரையை ஆற்றினார். தேவாரப் பாடல்பெற்ற பல கோவில்களில் கிடைத்த சான்றுகளையும் அக்கோவில்களுக்கு அருகே அமைக்கப்பட்ட புத்தக் கோவில்களைப் பற்றியும் படச்சான்றுகளுடன் சிறப்பான முறையில் விளக்கினார். [image: 01.புத்தசமயமும் தேவாரத்தலங்களும்-1.JPG] 01.புத்தசமயமும் தேவாரத்தலங்களும் [image: 02.புத்தசமயமும் தேவாரத்தலங்களூம்-2.JPG] 02.புத்தசமயமும் தேவாரத்தலங்களும் [image: 03.புத்தசமயமும் தேவாரத்தலங்களும்-3.JPG] 03.புத்தசமயமும் தேவாரத்தலங்களும்.
மூன்றாவதாகப்பேசிய திரு.ராஜவேலு, சென்னையை அடுத்த சாளுவன்குப்பம் பகுதியில் நடந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பெற்ற முருகன் கோவில் பற்றியும் அங்கு கிடைத்த சான்றுகளையும் ஆராய்ச்சி முயற்சிகளையும் பற்றி விரிவாகப் பேசினார். படச்சான்றுகளுடன் அவர் ஆற்றிய உரை அந்த அகழ்வாய்வையும் கோவிலின் பகுதிகளையும் நன்றாகக் கண்முன்னே நிறுத்தியது போல இருந்தது என்றால் மிகையாகாது. [image: 05.சாளுவன்குப்பம் அகழ்வாய்வு-1.JPG] 04.சாளுவன்குப்பம் அகழ்வாய்வு [image: 05.சாளுவன்குப்பம் அகழ்வாய்வு-2(முழுக்கோவில்).JPG] 05.சாளுவன்குப்பம் அகழ்வாய்வு-முழுக்கோவில்.
இவ்வுரைகளை ஓரளவு இயன்றவரை நான் ஒலிப்பதிவு செய்திருப்பதால் பின்னரும் கேட்டுப் இன்பமும் பயனும் பெறலாம் என்று கருதுகிறேன். ஒருசில புகைப்படங்களை இணைத்துள்ளேன்.
சிறப்புரைகளுக்கு இடையே பாலமாக இணைப்புரை வழங்கிய திரு.சந்திரசேகரன், வழக்கம்போல சுறுசுறுப்புடன் காணப்பட்டார். பண்பாட்டுச்சின்னங்களின் நிலை பற்றி உரையாற்றுகையில் தன்னை மறந்து ஒன்றிவிடுகிறார். சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல, இவரைப்போல ஒரு நூறுபேரை திரு.சத்தியமூர்த்தி அவர்களிடம் அளித்தால் நம்முடைய அனைத்துப் பாரம்பரியச் சின்னங்களும் புத்துயிர்பெற்றுவிடும் என்பது உண்மை. இத்தனை சுறுசுறுப்பானவரை இனி ‘மரபுத் தேனீ’ என்றழைக்கலாம் என்று முன்மொழிகிறேன். [image: ’மரபுத்தேனீ’ சந்திராவின் இணைப்புரை.JPG] 'Heritage Bee' - 'மரபுத் தேனீ’
திட்டமிட்டபடி விழா இனிதே நடைபெற்றது. அதன் சில பகுதிகளைப் பற்றி இங்கே கூறியுள்ளேன்.