சிதம்பரம்: சிதம்பரத்தில் செப்டிக் டேங்க் பள்ளம் தோண்டிய போது, இரண்டு அடி உயர, ஐம்பொன் அம்மன் சிலை கண்டுடெடுக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், சிதம்பரம், வெள்ளக்குளம் மேல்கரையைச் சேர்ந்தவர் கணபதி, 46. இவர் நேற்று, வீட்டு முன்புறம், "செப்டிக் டேங்கிற்காக, பள்ளம் தோண்டினார். ஐந்து அடி ஆழ பள்ளம் தோண்டும் போது, கனமான பொருள், மண் வெட்டியில் சிக்கியது. மேலும் தோண்டிய போது, இரண்டு அடி உயரம், 60 கிலோ எடையுள்ள, ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் யாழி, பாத்திரங்கள், சங்கு உள்ளிட்ட பொருட்கள், கிடைத்தன.ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்தது குறித்து, கணபதி, அண்ணாமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஏ.எஸ்.பி., துரை, தாசில்தார் தனசிங்கு, இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், ஐம்பொன் சிலையை பார்வையிட்டனர். சிலை கிடைத்த தகவலறிந்த, அப்பகுதி மக்கள் திரண்டு, அம்மனை வழிபட்டனர். ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பொருட்களை, தாசில்தார் பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்