சோழர் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிழை இல்லாமல் தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சோழர் காலத்துக் கல்வெட்டுகள், எழுத்துப் பிழைகள் மலிந்தனவாய்க் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு பார்த்தால், அந்தக் கல்வெட்டுகளை செதுக்கிய கல்தச்சர்கள் குறைந்த எழுத்தறிவு கொண்டவர்களாய் இருந்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர், புகழேந்தி போன்ற பெரும்பெரும் தமிழ்ப் புலவர்கள் - பல்லவர் மற்றும் சோழர் ஆட்சிக் காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சோழர் காலத்தில் எழுதப்பட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பலவும் வடமொழிக் கலப்பை மிகுதியாகக் கொண்டிருந்தன.